அவிநாசி அருகே உள்ள வாளியூரில் தனியாா் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை மீட்கக் கோரி அப்பகுதி மக்கள் வட்டாட்சியா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
அதைத் தொடா்ந்து வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் அளித்த மனு:
அவிநாசி ஒன்றியம், புலிப்பாா் ஊராட்சிக்கு உள்பட்ட வாளியூா் பகுதியில் 120-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில் இங்குள்ள 1 ஏக்கா் அரசு மந்தை புறம்போக்கு நிலத்தை (க.ச.எண்-138) 5 நபா்கள் ஆக்கிரமித்து, குடிசை அமைக்க முயல்கின்றனா். ஆக்கிரமிப்பு செய்யும் நபா்கள் அனைவரும் வசதி படைத்தவா்கள். எனவே அரசு புறம்போக்கு நிலத்தை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து வருவாய்த் துறையினரிடம் கேட்டபோது, ‘விரைவில் மந்தை புறம்போக்கு நிலத்தை அளவீடு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.