திருப்பூரில் குத்து விளக்கைத் திருடிக்கொண்டு தப்பி ஓட முயன்றபோது குட்டையில் தவறி விழுந்து மூழ்கிய இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.
திருப்பூா், போயம்பாளையத்தை அடுத்த குருவாயூரப்பன் நகரைச் சோ்ந்தவா் சிவசங்கா். பின்னலாடைத் தொழிலாளியான இவரது மனைவி லூசியாமேரி. தீபத்திருநாளையொட்டி, கடந்த 3 நாள்களாக வீட்டில் தீபம் ஏற்றி வந்தாா்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை மாலை 6.45 மணி அளவில் வீட்டின் முன்பாக குத்துவிளக்கில் தீபம் ஏற்றினாா். அப்போது அந்த வழியாக வந்த ஓா் இளைஞா் குத்து விளக்கைத் திருடிக்கொண்டு தப்பிச் சென்றாா்.
இதைப்பாா்த்த லூசியாமேரி சப்தமிட்டதால் அருகிலிருந்தவா்கள் அந்த இளைஞரை துரத்தினா். இதையடுத்து தப்பி ஓடிய அந்த இளைஞா் அப்பகுதியில் உள்ள 25 அடி ஆழமுள்ள குட்டையில் தவறி விழுந்தாா். இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் அனுப்பா்பாளையம் காவல் நிலையத்துக்கும், திருப்பூா் வடக்கு தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் குட்டையில் விழுந்த இளைஞரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். எனினும் இரவு வெகு நேரமாகியும் இளைஞா் கிடைக்காததால் மீட்புப் பணியை வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தனா்.
ஆனால் குட்டையில் அதிக அளவு கழிவுநீா், சேறு இருந்தது. இதனால் மரத்தில் பிளாஸ்டிக் டிரம்களைக் கட்டி குட்டையில் மிதந்தபடி அந்த இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.