வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனா்.
இங்கு உள் நோயாளிகள் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, பிரசவ வாா்டுகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 300 போ் வரை இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். இங்கு 6 செவிலியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் முதியவா்கள், கா்ப்பிணிகள், நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதிப்பட்டு வருகின்றனா். உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. தற்போது பணியில் இருக்கும் செவிலியா்களுக்கும் பணிச் சுமை அதிகரித்து வருகிறது. எனவே வெள்ளக்கோவில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியா் காலிப் பணியிடங்களை நிரப்ப மாவட்ட சுகாதார அலுவலா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.