தொழிலாளியின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காங்கயம் ஒன்றிய திமுக சார்பில் ரூ. 20ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது.
காங்கயம் அருகே துண்டுக்காடு ஜெ நகரில் வசிப்பவர் பிரகாஷ் (40), பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜானகி (35). இவர்களது மகன் யஷ்விந்த் (7).
இந்நிலையில், பிரகாஷுக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது. மாற்றுச் சிறுநீரகம் பெருத்தினால்தான் அவர் உயிர் வாழமுடியும் என்ற நிலையில் பிரகாஷுக்கு அவரது சகோதரி தனது சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுக்க முன்வந்துள்ளார். ஆனால், மாற்றுச் சிறுநீரகம் பொருத்த ரூ. 8 லட்சம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையறிந்த காங்கயம் வேர்கள் அமைப்பினர் பிரகாஷுக்கு உதவ முன்வந்து நிதி திரட்டி வருகின்றனர். இந்நிலையில், காங்கயம் வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் என்.எஸ்.சிதம்பரம், பிரகாஷ் இல்லத்திற்குச் சென்று ரூ. 20 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். வேர்கள் அமைப்பின் பொறுப்பாளர் வி.சங்கரகோபால், சிவன்மலை வேலுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.