ஜனவரி 8, 9 ஆம் தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் மற்றும் வியாபார நிறுவனங்கள் பங்கேற்க அனைத்து கட்சிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளர் க. செல்வராஜ் தலைமை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் விவரம்:
விவசாயமும், வேலை வாய்ப்பை வழங்கும் சிறு, குறு தொழில் நிறுவனங்களும் முற்றிலும் அழிந்து விடும் நிலையில் உள்ளன. விலைவாசி உயர்ந்ததுடன், கல்வியும், மருத்துவமும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சென்று விட்டன. இதற்கு மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்குவதான் காரணமாகும்.
ஆகவே, இந்த அரசுகளைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஜனவரி 8, 9 ஆம் தேதிகளில் நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்களும் பங்கேற்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஆர்.கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலாளர் முத்துகண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ரவி, அவைத்தலைவர் ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.