அவிநாசியில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ அவிநாசி வட்டக்கிளை பொறுப்பாளர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். இதில் அரசுஅறிவித்துள்ள மழலையர் பள்ளிக்கு புதிய ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும். பணியில் உள்ள இடைநிலை ஆசிரியரை கூடுதல் பணிக்கு அமர்ந்தக் கூடாது. தொடக்கப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியுடன் இணைக்கக் கூடாது. இதனால் கிராமப் புற மானவர்களுக்கு கல்வி பாதிக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ரமேஷ், ராமகிருஷ்ணன், வினேத், கருப்பன், ரங்கசாமி உள்பட 50க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பல்லடத்தில்...: பல்லடத்தில் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சார்பில் ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, பணியிடப் பாதுகாப்பு கேட்டு பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜாக்டோ - ஜியோ) சார்பில் இடைநிலை ஆசிரியர்களின் பணியிடங்களை ஒழிக்கும் அரசின் செயலை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையத்திற்கு பணிமாற்ற ஆணை வழங்கக்கூடாது. இடைநிலை ஆசிரியர்களில் இளையோரை வேறு ஒன்றியங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. பணிக்கு மாற்றம் செய்வதைக் கைவிட வேண்டும். தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை தகுதி இறக்கம் செய்து மேல்நிலைப் பள்ளி கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்வதைக் கைவிட வேண்டும். உயர்நிலை, மேல்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களை தொடக்க நிலை வகுப்புகளுக்கு பணியமர்த்தக் கூடாது.
15க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் 3 ஆயிரம் அரசுப் பள்ளிகள், 4ஆயிரம் சத்துணவு மையங்களை மூடுவதை நிறுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்லடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் க.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்புச் செயலாளர் வீ.பரமசிவம் வரவேற்றார். தமிழக ஆசிரியர் கூட்டணி பல்லடம் கல்வி மாவட்டச் செயலாளர் ஆ.செல்வம், தமிழக ஆசிரியர் கூட்டணி பல்லடம் வட்டாரத் தலைவர் இர.நடராஜன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் அ.ராஜப் பிரியா, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பல்லடம் பொருளாளர் மை.லூக்காஸ், பல்லடம் ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்புச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் பேசினர்.