திருப்பூரில் இரண்டு சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட 5 அரசு பள்ளிகளில் பயின்று வரும் 5, 963 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
திருப்பூர் தெற்கு சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட கே.எஸ்.சி. பள்ளி, ஜெய்வாபாய் பெண்கள் பள்ளி, பழனியம்மாள் பள்ளி ஆகிய பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் கே.எஸ்.சி. பள்ளி மாணவர்கள் 922 பேர், நஞ்சப்பா பள்ளி மாணவர்கள் 824 பேர், ஜெய்வாபாய் பள்ளி மாணவிகள் 2420 பேர், பழனி அம்மாள் பள்ளி மாணவிகள் 1, 208 பேர் என மொத்தம் 5, 374 பேருக்கு திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் சு.குணசேகரன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். இதில், முன்னாள் மண்டலத் தலைவர் முத்துசாமி, கண்ணப்பன், ராஜகோபால், சடையப்பன், கண்ணபிரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைக்கு உள்பட்ட குமார் நகர், பிஷப் உபகாரசாமி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இதில், 11ஆம் வகுப்பு மாணவர்கள் 282 பேர், 12ஆம் வகுப்பு மாணவர்கள் 307 பேர் என மொத்தம் 589 மாணவ, மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டிகளை தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் வழங்கினார்.
இதில், முன்னாள் மண்டலத் தலைவர்கள் ராதாகிருஷ்ணன், ஜான், பகுதி கழகச் செயலாளர் கருணாகரன், முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் , தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.