பள்ளபாளையத்தில் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிர்ப்பு

திருப்பூர் மாவட்டம், பள்ளபாளையத்தில் சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து

திருப்பூர் மாவட்டம், பள்ளபாளையத்தில் சட்டவிரோதமாக நடக்கும் மது விற்பனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காவல் கண்காணிப்பாளரிடம் அப்பகுதி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். 
இதுகுறித்து திருப்பூர், சாமளாபுரம் பேரூராட்சி பள்ளப்பாளையம் பகுதி பொதுமக்கள், காவல் கண்காணிப்பாளரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: 
பள்ளபாளையம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் வீதி, சர்ச் வீதி, அண்ணா வீதி ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். இப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் விசைத்தறி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வருகிறார். இவர், இப்பகுதியில் உள்ள கடைவீதி, பேருந்து நிறுத்தம், பள்ளி அருகில் உள்ளிட்ட பகுதிகளில் காலை,  இரவு நேரங்களில் மது விற்பனை செய்து வருகிறார்.
இதுகுறித்து மது விற்பனை செய்து வரும் முருகேசனிடம் கேட்டால், அவர் கொலை மிரட்டல் விடுக்கிறார். இதைக் கண்டித்து ஜனவரி 6ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டோம். இதுதொடர்பாக அந்த நபரைக் கைது செய்வதாக மங்கலம் காவல் துறையினர் உறுதியளித்தனர். ஆனால் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. எனவே, இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com