பல்லடம் சேடபாளையம் யுனிவர்சல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேடபாளையம் யுனிவர்சல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா, ஆண்டு விழா, பாரம்பரிய உணவுத் திருவிழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளித் தாளாளர் எஸ்.ராஜகோபால் தலைமை வகித்தார். விழாவை ஒட்டி பள்ளி மைதானத்தில், மாணவர்களின் பெற்றோர் பொங்கல் வைத்தனர். 1000 மாணவிகளின் கும்மி ஆட்டம், 500 மாணவர்களின் ஒயிலாட்டம் மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாணவர்களின் பறை இசை, சிலம்பம், கராத்தே, யோகா, நடன, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சாந்தி, பல்லடம் கல்வி மாவட்ட அலுவலர் கே.பி.கனகமணி, பல்லடம் காவல் துணைக் கண்காணிப்பாளர் பி.முத்துசாமி, வழக்கறிஞர் பி.மோகன் ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். விழாவில் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் பள்ளியில் முதலிடம் பெற்ற மூன்று மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் பெற்றோர் பங்கேற்றனர்.