வெள்ளக்கோவிலில் வட்டாரக் கல்வி அலுவலகம் முன்பு ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் பிரபாகர் தலைமை வகித்தார்.
தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைவர் பாலசுப்பிரமணியம், ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டாரச் செயலாளர் பாபு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளைத் துவங்க உத்தரவிட்டுள்ளது. இந்த மழலையர் வகுப்புகளுக்கு ஆசிரியர்களாக உபரி இடைநிலை ஆசிரியர்களைப் பணியமர்த்த முடிவு செய்துள்ளதை தவிர்க்க வேண்டும். ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் முடிவையும் கைவிட வேண்டும். 25 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள அங்கன்வாடி மையங்களை மூடும் முடிவை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு ஊழியர்கள் உள்பட 120 பேர் பங்கேற்றனர்.