பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் பொங்கல் விழாவில் ஆட்டுக் கிடா வண்டி சவாரி சனிக்கிழமை நடைபெற்றது.
கணபதிபாளையத்தில் இறைச்சி கடை நடத்தி வரும் முருகவேல் ஆட்டுக் கிடாவை கொம்பன் என்று பெயரிட்டு கடந்த இரண்டரை ஆண்டுகளாக வளர்த்து வருகிறார். ஆட்டுக் கிடாவுக்கு தான் சாப்பிடும் உணவு வகைகளை வழங்கி பழக்கம் செய்துள்ளார். ஆடு என்றாலே அது பழங்கள், பசும்புல்,தலை இலைகளை தாவரங்களைதான் சாப்பிடும் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் முருகவேல் வளர்க்கும் ஆட்டுக் கிடா சிக்கன் பிரியாணி, முட்டை, புரோட்டா, இட்லி, தோசை உள்ளிட்டவற்றை சாப்பிடுகிறது. இதன் கொம்புகள் நீளமாக உள்ளது. இதில் மணி கட்டப்பட்டுள்ளது.
குதிரை வண்டி, மாட்டு வண்டிபோல் ஆட்டுக் கிடா வண்டியை ரூ. 20 ஆயிரம் செலவில் தயார் செய்துள்ளார் முருகவேல். இதன் வெள்ளோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முருகவேல் வண்டியில் அமர்ந்து கட்டளையிட பயிற்சி கொடுக்கப்பட்டதைபோல் ஆட்டுக் கிடா வண்டி சாலையில் ஓடியது. இதைப் பொதுமக்கள் வியப்புடன் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.