பல்லடம், வெங்கிட்டாபுரத்தில் அரசுப் பேருந்து - கார் மோதிய விபத்தில் இருவர் சனிக்கிழமை உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் உள்ள தனியார் கார் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தவர்கள் ஸ்ரீராம் (25), பிரகாஷ் (35), நவநீதகிருஷ்ணன் (26) ஆகியோர். இவர்கள் மூவரும், பணி சம்பந்தமாக காரில் பொள்ளாச்சி நோக்கி சனிக்கிழமை மாலை சென்று கொண்டிருந்தனர்.
பல்லடம் அருகேயுள்ள வெங்கிட்டாபுரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பொள்ளாச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து, கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ஸ்ரீராம், பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கால் முறிவு அடைந்த நவநீதகிருஷ்ணனுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.