வெள்ளக்கோவில் அருகே பிளாஸ்டிக், பாலித்தீன் பொருள்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வெள்ளக்கோவிலில் இருந்து காங்கயம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளமடை அடுத்துள்ள வேலம்பாளையம் பிரிவருகே அடிக்கடி பாலித்தீன் கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கப்படுகிறது. இந்நிலையில் அதிக அளவிலான கழிவுகள் கொட்டப்பட்டு தீ வைக்கப்பட்டதால் நீண்ட நேரம் கரும்புகை சூழ்ந்து புதன்கிழமை காலை அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பிளாஸ்டிக் பொருள்களுக்கு அரசு தடை விதித்துள்ள நிலையில், இந்த தீ வைக்கும் சம்பவத்தால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது. வேறு எங்கோ வீணாகும் பாலித்தீன், பிளாஸ்டிக் கழிவுகள் இங்கு இரவு நேரத்தில் எடுத்து வரப்பட்டு, பின்னர் தீ வைக்கப்படுவதாகத் தெரிகிறது. எனவே சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.