பொங்கல் பண்டிகையை ஒட்டி தொடர் விடுமுறையால் உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலை, அமராவதி அணை, சின்னாறு வனப் பகுதி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூட்டம் புதன்கிழமை அலைமோதியது.
உடுமலையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான திருமூர்த்திமலை. பொங்கல் விடுமுறையை ஒட்டி ஆயிரக்கணக்கானோர் தங்களது குடும்பத்துடன் புதன்கிழமை இங்கு வந்திருந்தனர். இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் சுவாமி தரிசனம் செய்து விட்டு பின்னர் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
பின்னர் திருமூர்த்தி அணை, வண்ண மீன் பூங்கா இவைகளை கண்டு களித்தனர். இதை ஒட்டி திருமூர்த்தி மலையில் உள்ள கடைகளி ல் வியாபாரம் மும்முரமாக நடந்தது. இந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அமராவதி அணை:
பொங்கல் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியுடன் கொண்ட அமராவதி அணைப் பகுதிக்கு குடும்பத்துடன் வந்த மக்கள் இங்குள்ள முதலைப் பண்ணையை பார்வையிட்டனர். பின்னர் அமராவதி அணைக்கு முன்புறம் உள்ள பூங்காவில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர். மேலும் இங்குள்ள மீன் பண்ணை, சிறுவர் பூங்காவிலும் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக அமராவதி அணையின் மேல்புறத்துக்குச் சென்ற மக்கள் அணையின் அழகை கண்டு ரசித்தனர். பின்னர் படகுத் துறையில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சின்னாறு வனப் பகுதி:
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள சின்னாறு வனப் பகுதிக்கு கார், வேன் மற்றும் இர ண்டு சக்கர வாகனங்களில் வந்திருந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்தனர். இங்குள்ள பூங்கன் ஓடைப்பகுதியில் குவிந்த சுற்றுலாப் பய ணிகள் வனப் பகுதியில் சுற்றித் திரிந்த அழகிய புள்ளி மான்கள் மற்றும் யானைகளை நேரில் பார்த்து பரவசம் அடைந்தனர்.