வெள்ளக்கோவில் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
ஓலப்பாளையம் அடுத்த சுக்குட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் சக்திவேல் (35), கூலித் தொழிலாளி.
இவர் கடந்த 13 ஆம் தேதி வேலைக்குச் சென்று விட்டு, மாலை 6 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். மனைவி சுமதி வெளியே சென்று விட்டார்.
குளிக்க வெந்நீர் வைப்பதற்காக வீட்டிலிருந்த மண்ணெண்ணெய் அடுப்பில் காற்றடித்து தீக்குச்சியால் சக்திவேல் பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென ஸ்டவ் வெடித்து மண்ணெண்ணெய் சிதறி உடல் முழுவதும் தீப்பற்றியது.
காங்கயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.