திருப்பூரை அடுத்த அவிநாசிபாளையம் அருகே பிஏபி வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட இரு பெண்களில் ஒருவரின் அடையாளம் தெரிந்தது.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையத்தை அடுத்த நல்லகாளிபாளையம் பகுதியில் உள்ள பிஏபி வாய்க்காலில் இரு பெண்கள் கடந்த புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டனர்.
இதில் ஒரு பெண்ணுக்கு சுமார் 70 வயதும், மற்றொரு பெண்ணுக்கு சுமார் 35 வயதும் இருக்கும் என்று காவல் துறையினர் தெரிவித்தனர்.
இதுகுறித்து அவிநாசிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இருவரது புகைப்படங்களையும் மற்ற காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணை நடத்தினர். இதில் ஒருவரின் அடையாளம் தெரிந்தது. அவர் உடுமலையை அடுத்த எரிசனாம்பட்டியைச் சேர்ந்த ஆறுச்சாமி மனைவி திருமாத்தாள் (75) என்பது தெரியவந்தது. இவர் காணாமல் போனதாக கடந்த புதன்கிழமை தளி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் மற்றொரு பெண்ணைக் குறித்து காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.