அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி திருப்பூர் மாநகராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாநகரப் பகுதிகளில் அடிப்படை வசதி செய்து தரக் கோரி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாநகாராட்சி முதலாவது மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையர் வாசுகுமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூர் மாநகராட்சி 3ஆவது வார்டில் உள்ள தியாகி குமரன் காலனி பகுதியில் சேதமடைந்துள்ள தார் சாலையைப் புதுப்பித்து தர வேண்டும். வடிகால் இல்லாத இடத்தில் வடிகால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
தெரு விளக்குகள் இல்லாத இடத்தில், விளக்கு அமைத்து தர வேண்டும். ஆழ்குழாய் கிணற்றின் மோட்டார்களை சரி செய்து தண்ணீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். மேலும், விஜயாபுரி கார்டனில் புதிய வடிகால் வசதி, தெரு விளக்கு, தார் சாலை அமைக்க வேண்டும். டெக்மா நகரில் புதிய குடிநீர் இணைப்புகளை வழங்க வேண்டும். அன்னையம்பாளையம் முதல் கூத்தம்பாளையம் வரை உள்ள சேதமடைந்த சாலைகளை செப்பனிட வேண்டும். ஒட்டர்பாளையத்தில் பழுதடைந்துள்ள கான்கிரீட் சாலைகளை சரி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.