பல்லடம் 9 ஆம் பள்ள குட்டையில் மீன் பிடித்த இளைஞர் தவறி தண்ணீரில் விழுந்து திங்கள்கிழமை உயிரிழந்தார்.
பல்லடம், அம்மாபாளையம் ஆதிதிராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ் (22). இவர் அப்பகுதியில் விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார்.
இவர் தனது நண்பரான கார்த்திக் (23) என்பவருடன் அருகில் உள்ள 9 ஆம் பள்ளம் குட்டையில் மீன் பிடிக்கச் சென்றார்.
அங்கு மீன் பிடித்து கொண்டிருந்தபோது சின்ராஜ் குட்டையில் தவறி தண்ணீரில் விழுந்தார். இதைப் பார்த்து கார்த்திக் சத்தம் போட்டுள்ளார். ஆனால், நீச்சல் தெரியாததால் சின்ராஜ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.