உணவக உரிமையாளர் தற்கொலை: உறவினர்கள் மீது வழக்கு
By DIN | Published On : 05th July 2019 07:12 AM | Last Updated : 05th July 2019 07:12 AM | அ+அ அ- |

திருப்பூரில் உணவக உரிமையாளர் தற்கொலை வழக்கில் அவரது உறவினர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
திருப்பூர், வாலிபாளையத்தைச் சேர்ந்தவர் தேவபிரகாஷ் (35), இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வந்தார். இவரது உறவினருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தேவபிரகாஷ் ரூ.10 லட்சம் கடன் வாங்கிக் கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், அந்த உறவினர் சரிவர கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையாம். இதனால், கடன் தொகையை தேவபிரகாஷ் மாதந்தோறும் கட்டி வந்தாராம்.
இந்நிலையில், மனஉளைச்சலுடன் காணப்பட்ட தேவபிரகாஷ் கடந்த ஜூலை 1 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக அவர் தனது உறவினர்களுக்கு செல்லிடப்பேசி மூலமாக, தற்கொலை செய்துகொள்வதாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தது தெரியவந்தது. அவரது வீட்டில் இருந்த ஒரு கடிதத்தையும் காவல் துறையினர் கைப்பற்றியிருந்தனர்.
இதனிடையே, தேவபிரகாஷை தற்கொலைக்குத் தூண்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது உறவினர்கள் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த நிலையில், போலீஸார் தற்கொலை வழக்கை தற்கொலைக்குத் தூண்டிய வழக்காகப் பதிவு செய்தனர். தற்கொலைக்குத் தூண்டியதாக தேவபிரகாஷின் சித்தப்பா சுரேஷ், சித்தி செல்வி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் இருவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.