அவிநாசி அருகே கிணற்றில் தவறி விழுந்த நாயை தீயணைப்புத் துறையினர் உயிருடன் சனிக்கிழமை மீட்டனர்.
அவிநாசி அருகே கருக்கன்காட்டுப்புதூர் பகுதியைச் சேர்ந்த சைமன்ராஜ் என்பவருக்குச் சொந்தமான 8 மாத நாய்க்குட்டி அருகில் உள்ள 100 அடி ஆழமுள்ள கிணற்றில் சனிக்கிழமை தவறி விழுந்தது. இதுகுறித்து தகவலறிந்த அவிநாசி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் பா. பாலசுப்பிரமணியம், வீரர்கள் சீனிவாசன், பார்த்திபன், கார்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றுக்குள் விழுந்த நாயை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின் நாய் உயிருடன் மீட்கப்பட்டது. கிணற்றுக்குள் விழுந்த நாயை மனிதாபிமானத்துடன் வந்து மீட்டுக் கொடுத்த தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.