திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலமாக 2,316 வழக்குகளில் ரூ.55 கோடிக்கு சனிக்கிழமை சமரசத் தீர்வு காணப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசம் செய்து முடித்துக் கொள்ளும் வகையில் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், சொத்து வழக்குகள், பண வசூலிப்பு வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், பணியாளர் தகராறு வழக்குகள், குடும்ப நல வழக்குகள், நிலம் கையகப்படுத்துதல் வழக்குகள், வருவாய்த் துறை வழக்குகள் மற்றும் பிற உரிமையியல் வழக்குகள் என மொத்தம் 7,037 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில், மாவட்டம் முழுவதிலுமாக 2,316 வழக்குகளுக்கு சமரசத் தீர்வு காணப்பட்டன. இதன் தீர்வுத் தொகை ரூ.55 கோடியே 3 லட்சத்து 76 ஆயிரத்து 587 ஆகும்.
அவிநாசியில்...: அவிநாசியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 211வழக்குகளுக்கு ரூ.1 கோடியே 41 லட்சம் மதிப்பில் தீர்வு காணப்பட்டது. மக்கள் நீதிமன்றத்திற்கு முறையே சார்பு நீதிபதி பிரபாசந்திரன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தங்கராஜ், ஏ.எஸ்.கண்ணன்ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் அரசு, தனியார் காப்பீட்டு அலுவலர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், வழக்குகளில் தொடர்புடையோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.