உடுமலை வட்டம், குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் மடிக்கணினி கேட்டு பள்ளியை சனிக்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி வழியாகச் சென்ற கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், 10 நாள்களுக்குள் மடிக்கணினி வழங்கப்படும் என்று உறுதி அளித்ததால் மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இப்பள்ளியில் 2017-18 மற்றும் 2018-19 ஆகிய கல்வி ஆண்டில் படித்த 218 மாணவ, மாணவியருக்கு இதுவரை விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை என்ற புகார்கள் இருந்து வந்தன. இது குறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் மாணவர்கள் மனு அளித்திருந்தனர். ஆனாலும் இவர்களுக்கு மடிக்கணினி கிடைக்கவில்லை.
இந்நிலையில் தங்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பள்ளியை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர். அப்போது கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பள்ளி வழியே சென்றனர்.
அப்போது மாணவர்கள் முற்றுகையை அறிந்து பள்ளிக்குச் சென்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் மாணவர்களிடம் பேசினார். 10 நாள்களுக்குள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்கப்படும் என அமைச்சர் உறுதிமொழி அளித்தார். இதை ஏற்று மாணவர்கள் தங்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.