திருப்பூரில் இளைஞரிடம் செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்ற இருவரை காவல் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
திருப்பூர் கல்லூரி சாலை பகுதியைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் (21). இவர் கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், அலெக்ஸ்பாண்டியனை வழிமறித்து அவரது செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனர். இதுதொடர்பாக அவர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்தின்பேரில் இருவரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சாமுண்டிபுரத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் (20), வலையங்காட்டைச் சேர்ந்த அஜித்குமார் (21) என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும்தான் அலெக்ஸ்பாண்டியனிடம் இருந்து செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றதும் தெரியவந்தது. அதையடுத்து இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.