திருப்பூர் மாவட்டத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை:
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் சமூகநலத் துறை மூலமாக, ஆதரவற்றவர், கணவனால் கைவிடப்பட்டவர், விதவை, மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.
2019-20 ஆண்டுக்கான இலவச தையல் இயந்திரம் பெற விரும்புவோர் இதற்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72 ஆயிரத்துக்கு மிகாதவர்கள், 20 வயது முதல் 40 வயதுக்குள் இருப்பவர்கள், 6 மாதத்துக்குக் குறையாத தையல் பயிற்சிச் சான்று பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
பள்ளி மாற்றுச் சான்றிதழ், இருப்பிடச் சான்று, தையல் பயிற்சிச் சான்று, ஆதார் அட்டை நகல், பயனாளியின் பாஸ்போட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன், திருப்பூர் மாவட்ட சமூகநல அலுவலகத்துக்கு ஜூன் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.