காங்கயம் காவல் நிலைய ரவுண்டானா அருகே நடைபெறும் சாக்கடை கட்டுமானப் பணிகள் காரணமாக சாலையோரத்தில் சாக்கடைக் கழிவுநீர் குளம்போலத் தேங்கி நிற்பதால், சாக்கடைப் பணிகளை விரைந்து முடிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயம் நகரில் பங்களாப் புதூர், களிமேடு, உடையார் காலனி, கோவை சாலை பகுதிகளிலிருந்து வெளியேறும் சாக்கடைக் கழிவுநீர் காவல் நிலைய ரவுண்டானா வழியாக அகிலாண்டபுரம் குளத்தை அடைகிறது. ரவுண்டானா அருகே கரூர் சாலையில் சாக்கடையை நீட்டித்து, அதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்ரன. இதற்காக இப்பகுதியில் சாக்கடைக் கால்வாயை அடைத்து வைத்துள்ளதால், கழிவுநீர் தொடர்ந்து செல்ல வழியில்லாமல், கரூர் சாலை- அகிலாண்டபுரம் செல்லும் சாலை சந்திப்பில் குளம்போலத் தேங்கி நிற்கிறது.
சுமார் ஒரு அடி உயரத்துக்குத் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் அதிகளவில் பெருகி சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்துகின்ரன. தவிர, அகிலாண்டபுரம், சாம்பவலசு உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்கள் இந்தக் கழிவு நீரினுள்ளேயே நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தப் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை, வாகனங்கள் மூலம் அகற்றுவதாகக் கூறினாலும், இதுவரை அந்தப் பணிகளைச் செய்யவில்லை. எனவே விரைவாக சாக்கடைப் பணிகளை முடிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.