பல்லடம் அருகே பெரும்பாளியில் வருவாய்த் துறைக்கு சொந்தமான இடத்தில் செய்யப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
பல்லடம் ஒன்றியம், செம்மிபாளையம் ஊராட்சி, பெரும்பாளி கிராமத்தில் வருவாய்த் துறைக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் தனியார் நிறுவனத்தின் ஆயத்த ஆடைகள் விற்பனைக் கூடம் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. அந்த இடம் வருவாய்த் துறைக்கு சொந்தமானது என்றும், அதனை காலி செய்யுமாறும் வருவாய்த் துறையினர் கடை உரிமையாளருக்கு தொடர்ந்து பல முறை நோட்டீஸ் அனுப்பினர்.
இந்த நிலையில் அக்கடையின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால், வருவாய்த் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது.
அதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை மாலை துவங்கியது. ஆக்கிரமிப்புக் கட்டடத்தில் இருந்த தனியார் வங்கி ஏ.டி.எம். இயந்திரம் முதலில் பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டது. பிறகு கழிப்பிட கட்டடம் இடித்து அகற்றப்பட்டது. இந்த நிலையில், பெரிய கட்டடத்தை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.
சம்பந்தப்பட்ட துணி விற்பனை ஷோரூமின் உரிமையாளர்கள் வருவாய்த் துறையினரைச் சந்தித்து மனு அளித்ததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.