முத்தூர் அருகே தேங்காய் நார் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
முத்தூர் - கொடுமுடி சாலை, தொட்டியபாளையம், நொய்யல் தோட்டத்தில் தேங்காய் நார் தொழிற்சாலை உள்ளது. இதன் உரிமையாளர் பி.பூச்சாமி (54). இங்கு தேங்காய் மட்டையிலிருந்து நார், மதிப்புக் கூட்டப்பட்ட நார்க் கழிவுப் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் 2 ஏக்கர் திறந்தவெளிப் பரப்பில் தேங்காய் நார்கள், கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன. இதன் ஒரு பகுதியில் புதன்கிழமை மாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது. கடும் வெயிலால் ஏற்பட்ட வெப்பம் காரணமாக தானாகவே தீப்பிடித்ததாகத் தெரிகிறது. அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றும் முடியவில்லை.
உடனடியாக வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் சி.தனசேகரன் தலைமையிலான தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். தீயணைப்பு வாகனத்திலிருந்து தண்ணீரைப் பீய்ச்சியடித்து சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் நார்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின.