திருப்பூரில் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு, நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு, ரூ. 24 லட்சம் காப்பீட்டுத் தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது.
திருப்பூர், அவிநாசி சாலைப் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (47). இவரது மனைவி மாலதி (40). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. முருகேசன் தனது இருசக்கர வாகனத்தில் கடந்த 2018 செப்டம்பர் 15ஆம் தேதி அம்மாபாளையம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த நான்கு சக்கர வாகனம் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
அந்த விபத்தில் பலத்த காயமடைந்த முருகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதுதொடர்பாக விபத்துக் காப்பீடு தொடர்பான வழக்கு திருப்பூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரிக்கப்பட்டது. இதில், விபத்தில் பலியான முருகேசன் குடும்பத்தினருக்கு ரூ. 24 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்று தீர்வானது. இதற்கான ஆணையை, விபத்தில் பலியான முருகேசனின் மனைவி மாலதியிடம் முன்னாள் நீதிபதி பத்மநாபன், நீதிபதி தீபா ஆகியோர் வழங்கினர்.