அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் முகிலன் தலைமை வகித்தார். செயலாளர் சம்சீர் அகமது முன்னிலை வகித்தார். போராட்டத்தை அடுத்து சங்க நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் நடைபெறும் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் இடம் பெற்றிருந்தன.