ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை: விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 14th June 2019 09:42 AM | Last Updated : 14th June 2019 09:42 AM | அ+அ அ- |

பாரதப் பிரதமரின் கிசான் நிதித் திட்டம் மூலம் விவசாயிகள் ரூ. 6 ஆயிரம் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை:
பாரதப் பிரமதரின் கிசான் நிதித் திட்டம் பிப்ரவரி 24 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக, 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்திருந்த சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ. 6ஆயிரம் நிதி உதவி (நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ. 2ஆயிரம் வீதம்) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டம் தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் அதாவது, சிறு, குறு, நடுத்தரம், பெரிய விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே, உயர் வருவாய்ப் பிரிவினர், நிறுவனத்தின் பெயரில் நிலம் உள்ளவர்கள் உள்ளிட்ட விலக்களிக்கப்பட்ட நபர்கள் தவிர, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் சேர கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் அளிக்கலாம்.
மேலும், வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல் செய்து கொள்ளும் வாரிசுதாரர்களும் இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். இதுவரை நிலமானது இறந்த தாய் அல்லது தந்தை பெயரில் இருந்தால், அதற்குரிய வாரிசுதாரர் சம்பந்தப்பட்ட பகுதியின் வட்டாட்சியரை அணுகி உரிய முறையில் விண்ணப்பித்து ஜூன் 30 ஆம் தேதிக்குள் பட்டா மாறுதல் செய்து கொள்ளலாம்.
அவர்களும் இந்த பி.எம். கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் பயன் பெறலாம். இதற்கென தற்போது நடைபெறும் வருவாய்த் தீர்வாயத்தை (ஜமாபந்தி) பயன்படுத்திக் கொள்ளலாம்.