இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி காங்கயத்தில் நடைபெற்ற வருவாய்த் தீர்வாயத்தில் எல்லப்பாளையம்புதூர் ஊராட்சி, புள்ளக்காளிபாளையம் பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம், அப்பகுதி மக்கள் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது :
காங்கயம் தாலுகா, எல்லப்பாளையம்புதூர் ஊராட்சிக்கு உள்பட்ட புள்ளக்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த 20 குடும்பங்களைச் சேர்ந்தோர் இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்து வருகிறோம்.
இந்நிலையில், காங்கயம் தாலுகா, வட சின்னாரிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் உள்ள நிலங்களை எங்களுக்கு வழங்க வாய்ப்புள்ளதாக காங்கயம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் எங்களுக்கு உறுதியளித்திருந்தார். அதற்காக எங்களின் வருமானச் சான்று, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை தனி வட்டாட்சியரிடம் அளித்துள்ளோம்.
குடியிருக்க சொந்த வீடோ, நிலமோ இல்லாத எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.