சேவூர் அருகே சட்டவிரோதமாக மது விற்றவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
சேவூர் அருகே பாப்பாங்குளம், பவர்ஹவுஸ் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் கருப்பசாமி மகன் ராஜா (32). இவர் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உத்தரவின்பேரில், மது விலக்கு காவல் ஆய்வாளர் ஹேமா, உதவி ஆய்வாளர் ஜெகநாதன், தனிப் பிரிவு காவலர் வெள்ளியங்கிரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று ராஜாவின் வீட்டை சோதனையிட்டனர். அப்போது வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த 76 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவிநாசி மது விலக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.