திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
திருப்பூர், மங்கலம் நால் ரோடு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 10 நாள்களாக சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர்.
இந்த நிலையில், சீரான குடிநீர் விநியோகம் செய்யக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மங்கலம்-திருப்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன், மங்கலம் காவல் துறையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியலைக் கைவிட்டனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.