பெருமாநல்லூர், ஈட்டிவீராம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என ஒன்றிய அலுவலர்களுக்கு திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.என்.விஜயகுமார் உத்தரவிட்டார்.
திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பெருமாநல்லூர், ஈட்டிவீராம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சாலை, சாக்கடை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படைப் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர், குடிநீர் வடிகால் வாரியத்தினர், பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பூர் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.என்.விஜயகுமார், பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று அடிப்படை பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதையடுத்து, பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான குடிநீரைத் தடையின்றி வழங்க வேண்டும். அனைத்து அடிப்படை வசதிகளையும் உடனக்குடன் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனைப் பட்டா, குடிநீர் இணைப்பு, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்டவை குறித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் மகுடீஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கனகராஜ், மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நவமணி, இந்துமதி, ஊராட்சி செயலர்கள் தனபால், மகேஷ், அரசுஅலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.