வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூர் அருகே நடந்த சாலை விபத்தில் ஆட்டு வியாபாரி உயிரிழந்தார்.
முத்தூர் வாய்க்கால்மேட்டுப்புதூரைச் சேர்ந்தவர் தண்டபாணி (42), ஆட்டு வியாபாரி. இவர் ஜூன் 18 ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் முத்தூர் - காங்கயம் சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென சாலையில் குறுக்கே வந்தவர் மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து பெங்களூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இறந்த தண்டபாணிக்கு மனைவி வாசுகி மற்றும் திருமண வயதில் 2 மகள்கள் உள்ளனர்.
இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.