உடுமலை அருகே விவசாயியிடம் ரூ. 2,500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை வட்டம், குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரபட்டியை அடுத்த ஆலமரத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (32), விவசாயி. இவர் தனது மாமனார் திருமலைசாமி பெயரில் உள்ள விளை நிலத்தில் சொட்டு நீர்ப் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயி சான்றிதழுக்காக வடுகபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தகுமாரை அணுகியுள்ளார். அப்போது, சான்றிதழ் வழங்க ஆனந்தகுமார் ரூ. 2,500 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் செல்வராஜ் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தகுமாரைச் சந்தித்து ரூ. 2,500-ஐ செல்வராஜ் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி ரவிசந்திரன், ஆய்வாளர் கௌசல்யா ஆகியோர் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தகுமாரை (32) கையும் களவுமாகப் பிடித்தனர்.
இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஆனந்தகுமாரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் திருப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.