பல்லடம், திருப்பூர் ஒன்றியப் பகுதியைச் சேர்ந்த 155 கிராம மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.100 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டப் பணி புதன்கிழமை பூமி பூஜை நடத்தி துவக்கி வைக்கப்பட்டது.
பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம், கரைப்புதூர், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, திருப்பூர் ஒன்றியம், இடுவாய், மங்கலம், முதலிபாளையம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த 155 கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.100 கோடி மதிப்பில் மேட்டுப்பாளையம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து பல்லடம் அருகேயுள்ள சின்னக்காளிபாளையத்தில் இதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு திருப்பூர் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினர் கே.என்.விஜயகுமார் முன்னிலை வகித்தார். புதிய குடிநீர் திட்டத்தை பூமி பூஜை நடத்தி பல்லடம் சட்டப் பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் பணிகளை துவக்கி வைத்தார்.
இதில் பல்லடம் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. பரமசிவம், கூட்டுறவு வங்கித் தலைவர் ஏ.சித்துராஜ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சொக்கப்பன், பழனிசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.