வெள்ளக்கோவிலில் அரசு மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வெள்ளக்கோவில் - கரூர் சாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு காங்கயம் வட்டச் செயலாளர் திருவேங்கடசாமி தலைமை வகித்தார். வெள்ளக்கோவில் வட்டார காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நடராஜ், நகர மதிமுக செயலாளர் ராம்குமார், கோவை மண்டல திராவிடர் கழக இளைஞரணிச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வெள்ளக்கோவில் பழைய பேருந்து நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான கட்டட வளாகத்தில் பசுமையாக உயர்ந்து, வளர்ந்திருந்த பழைமையான ஐந்து பூவரசன், வேம்பு, சவுக்கு, சீனிப் புளி, அசோக மரங்கள் பிப்ரவரி 11ஆம் தேதி இரவில் வெட்டப்பட்டுள்ளன. அரசுக் கட்டடத்தின் சுற்றுச்சுவரும் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
அருகில் உள்ள நில உரிமையாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட நலனுக்காக இவ்வாறு அத்துமீறி நடந்துள்ளனர்.
மரங்களை வெட்டிய போது மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி உதவியுள்ளனர். புகார் தெரிவித்தும் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதுகுறித்து காங்கயம் வட்டாட்சியரிடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தில் திமுக, கொமதேக, விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட அனைத்துக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.