திருப்பூரில் மது பானம் தர மறுத்ததால் பார் ஊழியர்கள் இருவரை மூன்று பேர் கொண்ட கும்பல் வெள்ளிக்கிழமை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.
திருப்பூரில் இருந்து வஞ்சிபாளையம் செல்லும் சாலையில் வஞ்சிபாளையம் அருகே டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. இந்த மதுக் கடை பாரில் கண்ணதாசன், நல்லேந்திரன் ஆகிய இருவரும் ஊழியர்களாக வேலைபார்த்து வருகின்றனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் காரில் மூன்று பேர் இவர்களது பாருக்கு வந்துள்ளனர்.
பின்னர், காரில் இருந்து இறங்கிய மூவரும் கண்ணதாசன் மற்றும் நல்லேந்திரனிடம் மது கேட்டு தகராறு செய்துள்ளனர். கடை நேரம் முடிந்து விட்டது என கூறியதால் ஆத்திரம் அடைந்த அவர்கள், பார் ஊழியர்கள் இருவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு திருப்பூர் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அனுப்பர்பாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.