திருப்பூர், 15 வேலம்பாளையம் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.14 லட்சத்தை மர்ம நபர்கள் வெள்ளிக்கிழமை திருடிச் சென்றனர்.
திருப்பூர் 15 வேலம்பாளையத்தை அடுத்த மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் செந்தில்குமார் (43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சத்தியசுந்தரி (39). இவர், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறை பிரிவில் கணினி உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், கணவன், மனைவி இருவரும் வீட்டைப் பூட்டி விட்டு வழக்கம்போல் கடந்த வெள்ளிக்கிழமை பணிக்குச் சென்றனர்.
பின்னர் இரவு 8 மணி அளவில் சத்தியசுந்தரி வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவுகள் திறந்துகிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ.14 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சத்தியசுந்தரி, 15 வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.