பல்லடத்தில் பூக்கள் வரத்து குறைந்ததால் விலை உயர்வு
By DIN | Published On : 24th March 2019 03:21 AM | Last Updated : 24th March 2019 03:21 AM | அ+அ அ- |

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பல்லடத்துக்கு பூக்கள் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
பல்லடம் பகுதிக்கு சத்தியமங்கலம், நிலக்கோட்டை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. தற்போது கோடை வெப்பத்தால் பூக்கள் வரத்து வழக்கத்தை விட குறைந்துள்ளது. அதே சமயம் நுகர்வு குறையவில்லை. இதனால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
முல்லை பூ கிலோ ரூ.400-லிருந்து ரூ.750 ஆக உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ.200-க்கு விற்கப்பட்டது ரூ.600 ஆக உயர்ந்துள்ளது. கனகாம்பரம் ரூ.200 விலை அதிகரித்து ரூ.400-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூக்களும் கிலோவுக்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை உயர்ந்துள்ளது.
இது குறித்து பல்லடம் பூ வியாபாரி மணி கூறியது:
கோடை வெப்பத்தின் காரணமாக விவசாய தோட்டத்தில் பூக்கள் மொட்டுகளாக உள்ள நிலையில் பறிக்கும் முன்பே வெப்பத்தால் காய்ந்து விடுகிறது. பூக்களை மொட்டுகளாக கொண்டு வந்தால் தான் பெண்கள் விரும்பி வாங்குகின்றனர். ஆனால், வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் பூக்களை முழு மொட்டாக விற்பனைக்கு கொண்டு வர முடியவில்லை. ஓரளவு மொட்டாக தான் விற்பனைக்கு வருகின்றன. தற்போது வரத்து குறைந்துள்ளதால் விலை அதிகரித்துள்ளது. அதே சமயம் விற்பனை குறையவில்லை என்றார்.