திருப்பூரில் ஆயுதப்படை பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் ஊரகக் காவல் துறையினர் கூறியதாவது:
ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம், லட்சுமி நகர் 4 ஆவது வீதியில் வசித்து வருபவர் முகமது இப்ராஹிம். இவரது மகள் பர்வீன் பாபி (23). திருமணம் ஆகாதவர். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு காவல் பணியில் சேர்ந்துள்ளார்.
பின்னர் 2018-ஆம் ஆண்டு முதல், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில், பர்வீன் பாபி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முதலிபாளையத்தில் இருந்து பெருந்தொழுவு செல்லும் வழியில் உள்ள அங்காளபரமேஸ்வரி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார்.
இவர் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குப் பதிவு இயந்திரம் வைத்துள்ள அறையில் கடந்த சில நாள்களாகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பணி முடிந்து வீடு திரும்பிய பர்வீன் பாபி இரவு 7 மணி அளவில் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார்.
அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு நல்லூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பர்வீன் பாபி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து திருப்பூர் ஊரகக் காவல் துறையினர் வழக்குப் பதிந்து பர்வீன் பாபியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.