திருப்பூரில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகள் பட்டியல் குறித்து அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாநகராட்சி ஆணையர் க.சிவகுமார் தலைமை வகித்தார். பின்னர் அவர் பேசியதாவது:
திருப்பூர் மாநகராட்சிப் பகுதிகளில் ஒரு வாக்குச் சாவடிக்கு 1,400 வாக்காளர்கள் வரை என அமைக்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டு, வாக்களிக்க வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து கருத்துகள் ஏதேனும் இருந்தால் தெரிவிக்கலாம் என்றார்.
இதையடுத்து அரசியல் கட்சியினர் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக ஆணையரிடம் அளித்தனர்.
கூட்டத்தில் உதவி ஆணையாளர்கள் முகமது சபியுல்லா, செல்வநாயகம் மற்றும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.