காங்கயத்தை அடுத்த ஊதியூர் அருகே சாலையோரம் வளர்ந்து நிற்கும் புதர்களால் வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே ஊதியூர்-வஞ்சிப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் அருகே நிழலிக்குச் செல்லும் சாலை பிரிகிறது.
இந்தச் சாலையில் ஆண்டிப்புதூர் வரை உள்ள 3 கி.மீ. தூரத்துக்கு சாலையின் இருபுறங்களிலும் செடிகள் வளர்ந்து புதர்போல படர்ந்துள்ளது.
தற்போது, வெயிலுக்கு அச் செடிகள் காய்ந்து, அதன் குச்சிகள் சாலையில் நீட்டிக் கொண்டிருக்கின்றன. இதனால், அச் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
மேலும், சாலையில் எதிரே வாகனங்கள் வந்தால் விலகிச் செல்ல முடியாத அளவுக்கு புதர்கள் இருப்பதால் வாகன ஓட்டுநர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் புதரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.