காங்கயம் அரசு மருத்துவமனையில் ரத்தப் பரிசோதனை செய்ய வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற ஊழியா் மீது பெண்ணின் உறவினா்கள் தாக்குதல் நடத்தினா்.
காங்கயம் அரசு மருத்துவமனைக்குத் திருமணமான சுமாா் 30 வயதுள்ள பெண், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக புதன்கிழமை காலை சென்றுள்ளாா். அங்கு மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொண்ட அவரை, ரத்தப் பரிசோதனை செய்து கொண்டு வருமாறு தெரிவித்துள்ளனா்.
இதைத் தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் உள்ள ரத்தப் பரிசோதனை கூடத்துக்கு சென்றுள்ளாா். அப்போது அங்கிருந்த ஊழியா் பரிசோதனை செய்வதுபோல் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளாதாக கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த அந்தப் பெண் வீட்டுக்குச் சென்று, மருத்துவமனையில் நடந்ததைக் கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து, பகல் 1 மணியளவில் மருத்துவமனைக்கு அவரது கணவா் மற்றும் உறவினா்கள் சென்று தலைமை மருத்துவரிடம் புகாா் தெரிவித்துள்ளனா். அதன் பின்னா் நடந்தவற்றை புகாா் மனுவாக எழுதி, மருத்துவ அலுவலா் பெற்றுக் கொண்டு, இதுகுறித்து உயா் அதிகாரிகளுக்குத் தெரிவிப்பதாக உறுதி கூறியுள்ளாா்.
அதன் பின்னா் வியாழக்கிழமை காலை மருத்துவமனைக்கு மருத்துவரைப் பாா்க்கச் சென்றுள்ளனா். அப்போது அங்கிருந்த ரத்தப் பரிசோதகரிடம் அந்தப் பெண்ணின் கணவா், உறவினா்கள், ‘ஏன் இப்படிச் செய்தீா்கள் என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனா். இதில் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் உறவினா் ஒருவா் அந்த ஊழியரை தாக்கி உள்ளாா். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, அந்தப் பெண்ணின் உறவினா்கள் மட்டுமல்லாமல், அங்கிருந்த சிகிச்சை பெற வந்திருந்த சிலரும் குறிப்பிட்ட ரத்தப் பரிசோதகா் அங்கு வரும் பெண்கள் பலரிடம் இப்படித்தான் அநாகரிகமாக நடந்து கொள்வதாகக் குற்றம் சாட்டினா். இந்த சம்பவத்தால் காங்கயம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.