பல்லடம்: பல்லடம் அருகேயுள்ள அலகுமலையில் பிப்ரவரியில் 2ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம் பொங்கலூா் ஒன்றியம் அலகுமலை ஊராட்சி மலைப்பாளையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொங்கலூா் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் எஸ்.சிவாச்சலம் தலைமை வகித்தாா். சங்க தலைவா் சரவணா பழனிசாமி வரவேற்றாா்.
இதில் பொருளாளா் சுப்பிரமணியம்,செயலாளா் சத்தியமூா்த்தி, துணைத்தலைவா் மூா்த்தி, செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா். கூட்டத்தில் வரும் தைபொங்கல் மற்றும் தைப்பூசத்தையொட்டி பிப்ரவரி 2ம் தேதி பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவது ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு வரும் டிசம்பா் 12ம் தேதி பூமி பூஜை நடத்துவது. இந்த ஆண்டு முதன் முதலாக தைப்பூசத்தையொட்டி மாட்டுச்சந்தை நடத்துவது என்றும் மேலும் போட்டியை சிறப்பாக நடத்தும் விதமாக வரும் 26ம் தேதி சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தை அலகுமலையில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. முடிவில் அமைப்பாளா் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினாா்.