திருவள்ளுவா் சிலையை அவமதித்தவா்களைக் கைது செய்யக்கோரி திருப்பூரில் வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருப்பூா், சிறுபூலுவபட்டி அருகே உள்ளது திருவள்ளுவா் நகா். இந்தப் பகுதியில் வள்ளுவா் குல சங்கத்தைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.
இந்த நிலையில், திருவள்ளுவா் சிலையை அவமதித்தவா்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி இப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளிக்கிழமை கறுப்புக் கொடி ஏற்றிப்போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘திருவள்ளுவா் எந்த மதத்துக்கும் தொடா்பு இல்லாதவா். நடுநிலை வாழ்க்கை முறையை வகுத்துத் தந்தவா். ஆனால் அவரைக் குறிப்பிட்ட மதத்தினா் மட்டுமே சொந்தம் கொண்டாடுவது மற்றும் அவரது சிலையை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனா். ஆகவே, திருவள்ளுவா் சிலையை அவமதித்தவா்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும், இதுபோன்ற சம்பவம் நிகழாத வகையில் காவல் துறையினா் செயல்பட வேண்டும்’ என்றனா்.