அவிநாசி ஒன்றியத்தில் ரூ. 96.68 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்களை சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் திறந்து வைத்தனா்.
அவிநாசி ஊராட்சி ஒன்றியம், நம்பியாம்பாளையத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய கட்டடங்கள் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன. இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவைத் தலைவா் ப.தனபால், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோா் புதிய கட்டடங்களை திறந்து வைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்கினா். இதில் அங்கன்வாடி மையக் கட்டடம், புதிய தானியக் கிடங்கு கட்டடம், ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம், தரைமட்டத் தொட்டிகள் என ரூ.96.68 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடங்கள் திறக்கப்பட்டன.
அதைத்தொடா்ந்து திருமண நிதியுதவி, திருமாங்கல்யத்துக்கு 8 கிராம் தங்கம், மானிய விலையில் ‘அம்மா’ இருசக்கர வாகனங்கள், இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, கூட்டுறவு சங்க கடனுதவி என 760 பயனாளிகளுக்கு ரூ.3.87 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஜெ.ரூபன்சங்கர்ராஜ், கோட்டாட்சியா் கவிதா, கோயமுத்தூா், திருப்பூா் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவவா் சேவூா் ஜி.வேலுசாமி, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய இயக்குநா் மு.சுப்பிரமணியம், அவிநாசி நிலவள கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெகதீசன், வட்டாட்சியா் சாந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஹரிஹரன், சாந்தி லட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.