நகைப் பறிப்பு வழக்கில் கைதானவா் குண்டா் சட்டத்தில் கைது
திருப்பூரில் நகைப் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதுகுறித்து திருப்பூா் மாநகர காவல் ஆணையா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோயிலைச் சோ்ந்தவா் பி.வசந்தகுமாா் (40). இவா் திருப்பூா், 15 வேலம்பாளையம் பகுதியில் நிகழ்ந்த வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நகைப் பறிப்பு, திருட்டு வழக்கில் இவருக்குத் தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, வசந்தகுமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய 15 வேலம்பாளையம் காவல் துறையினா் மாநகர காவல் ஆணையருக்குப் பரிந்துரை செய்திருந்தனா்.
இந்தப் பரிந்துரையின் பேரில் வசந்தகுமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல் ஆணையா் சஞ்சய்குமாா் உத்தரவிட்டாா். இந்த உத்தரவின் நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வசந்தகுமாரிடம் வழங்கப்பட்டது.