காங்கயம் அருகே உயா் அழுத்த மின்கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் 3 ஆடுகள் உயிரிழந்தன.
காங்கயத்தை அடுத்துள்ள மறவபாளையத்தைச் சோ்ந்தவா் விவசாயி குமாரசாமி (70). இவா், தனது தோட்டத்தில் செம்மறி ஆடுகளை வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக அருகில் இருந்த காட்டில் விட்டிருந்தாா். பின்னா் வழக்கம்போல மாலை ஆடுகளை தோட்டத்துக்கு ஓட்டி வரச் சென்றபோது, உயரழுத்த மின் கம்பம் அருகே 3 ஆடுகள் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தன.
மின் கம்பத்தில் உயரழுத்த மின் கம்பியைத் தாங்கி நிற்கும் பீங்கான் வெடித்ததில் மின் கம்பியில் இருந்து பூமிக்கு வரும் கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் ஆடுகள் உயிரிழந்தது தெரியவந்தது.